முகப்பு
கோயம்புத்தூர்

நாடோடி வாழ்க்கையால் வருந்தும் சர்க்கஸ் கலைஞர்கள்!

பரமத்தி வேலூர்,ஆக.12: நாடோடி வாழ்க்கை நடத்துவதாலேயே அரசின் அடிப்படை சலுகைகளைக்கூட பெற முடியாத நிலையில் உள்ளனர் சர்க்கஸ் கலைஞர்கள்.  இதனால், இவர்களது குழந்தைகள் பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலையில் உள

Updated On : 20 செப்டம்பர், 2012 at 1:49 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:35 PM

பரமத்தி வேலூர்,ஆக.12: நாடோடி வாழ்க்கை நடத்துவதாலேயே அரசின் அடிப்படை சலுகைகளைக்கூட பெற முடியாத நிலையில் உள்ளனர் சர்க்கஸ் கலைஞர்கள்.  இதனால், இவர்களது குழந்தைகள் பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளனர்.

 நவீன தொழல்நுட்பங்கள் வளர்ச்சி பெறாத வரையில் அனைத்து தரப்பு மக்களாலும் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் கண்டு ரசிக்கப்பட்டது. ஆனால்,விரல் நுனியிலேயே உலகச் செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில் இன்டர்நெட்,கணினி,வீடுதோறும் தொலைக்காட்சி என மாறிவிட்ட சூழலில் சிறிய அளவிலான சர்க்கஸ் தொழிலாளர்களுக்கு வரவேற்பு இல்லை. மேலும், அதிக முதலீடு செய்து சர்க்கஸ் நிகழ்ச்சிக்குத் தேவைப்படும் உப கரணங்கள், மிருகங்கள் ஆகியவைகளை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

 இதனால் தொழிலை நடத்த முடியாமலும் அன்றாட உணவுக்கு அவதிப்படும் சூழலும் உள்ளது. அரசின் அடிப்படை சலுகைகளான குடும்ப அட்டை இருந்திருந்தால்கூட ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி மூலம் உணவுத் தேவையை பூர்த்தி செய்திருப்பர். ஆனால், அதுவும் இல்லை. நாடோடி வாழ்க்கை நடத்துவதால் சாதிச் சான்று, இருப்பிடச்  சான்று, வாக்காளர் அடையாள அட்டை இல்லை. இந்தியக் குடிமகன் என்பதற்கான அங்கீகாரமே இல்லாத நிலையில்தான் உள்ளனர்.

Advertisement

  கரூர் மாவட்டம் நொய்யல் குந்தாணிபாளையம் அருகே உள்ள நத்தமேட்டைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ஸ்ரீ கணபதி என்ற பெயரில் சர்க்கஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவரும், இவரது முன்னோர்களும் பரம்பரை பரம்பரையாக ஊர் பகுதிக்குள் விளையாட்டு,தெருக்கூத்து ஆகியவைற்றை நம்பி தொழில் செய்து வந்தனர்.  இதில் கிடைத்த வருவாயில் கொஞ்சம் பொருட்களை வாங்கி சிறய அளவில் சர்க்கஸ் தொழில் செய்யத் துவங்கினர்.

  சர்க்கஸ் தொழில் குறித்து சண்முகம் கூறியது:

 எங்களது சர்க்கஸ் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஏற்றிச்  செல்வதற்கு வாகனத்திற்கு தரும் வாடகை மிக அதிகாமாக உள்ளது. மேலும், ஓரிடத்திற்குச் சென்று சர்க்கஸ் கூடாரம் அமைப்பதற்கு மூன்று நாட்கள் செலவாகிறது. அந்த மூன்று நாட்களும் அருகில் உள்ளவர்களிடத்தில் அரிசி,பருப்பு,காய்,கறிகளை இலவசமாக வாங்கித்தான் சமைத்து சாப்பிடுவோம். நாங்கள் தங்கும் 10 முதல் 15 நாட்களுக்கு வரும் வருவாய் மீண்டும் அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கே சரியாக இருக்கும். நாங்கள் எங்கள் குழந்தைகளை வைத்துதான் தொழில் செய்து வருகிறோம்.

 எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் வேறு தொழில் தெரியாது. அவர்கள் கம்பி மேல் ஏறி விளையாடும் போது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. அவர்கள்

கம்பியில் ஆடினால்தான் எங்களுக்கு சாப்பாடு. நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்களும், குழந்தைகளும் 15 பேர் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளோம். ஒரு நேரத்துக் காட்சியை முடித்து வரும்வரை நாங்கள் அனைவரும் மரண பயத்தில்தான் இருப்போம். சாதிச் சான்று கேட்பதால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப

முடியாத சூழ்நிலையில் உள்ளோம்.

 எங்கள் ஊர் பகுதியில் இருந்து மட்டும் 20 கம்பெணிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சிறிய அளவிலான சர்க்கஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் அனைவரும் என்ன ஜாதி என்றும், என்ன மொழி என்றும் தெரியாது. எங்களுக்கு இதுவரை குடும்ப அட்டை மற்றும் அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை. நிலையான இருப்பிடம் இருந்தால் மட்டுமே குடும்ப அட்டையும்,அடையாள அட்டையும் வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. நாடோடியாகத் திரியும் சொற்ப அளவிலான எங்களது சமூகத்தையும் அங்கீகரித்து அரசின் அனைத்து அடிப்படை சலுகைகளையும் வழங்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.