சென்னிமலை, ஏப். 26: பத்மஸ்ரீ எம்.பி.நாச்சிமுத்து முதலியாரின் நூற்றாண்டு விழா ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் சனிக்கிழமை (ஏப். 28) நடைபெற உள்ளது.
÷தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸின் முன்னாள் தலைவரும், சென்டெக்ஸ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் நிறுவனருமான எம்.பி.நாச்சிமுத்து முதலியார் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.
÷1952 முதல் 17 ஆண்டுகள் கோ-ஆப்டெக்ஸின் தலைவராகவும், 1953 முதல் 17 ஆண்டுகள் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை தலைவராகவும், 32 ஆண்டுகள் அகில இந்திய கைத்தறி வாரியத்தின் தலைவராகவும், 46 ஆண்டுகள் சென்டெக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.
÷மேலும் ரிசர்வ் வங்கி ஆலோசனைக்குழு உறுப்பினர், இந்தியன் வங்கி இயக்குநர், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் என பல்வேறு பதவிகளை வகித்த அவர், சென்னிமலை குமரப்பா செங்குந்தர் பள்ளித் தாளாளராகவும், ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தின் பொருளாளராகவும் பணியாற்றினார். சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியையும் நிறுவினார்.
÷இவரது சேவையைப் பாராட்டிய மத்திய அரசு 1983-ம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி சிறப்பித்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ராமசந்திரன் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த எம்.பி.நாச்சிமுத்து முதலியார் தம் வாழ்நாளின் பெரும் பகுதியை கைத்தறித் துறையின் வளர்ச்சிக்காகவே செலவிட்டார்.
÷அவரது நூற்றாண்டு விழா சென்னிமலை சென்டெக்ஸ் கைத்தறி சங்க வாளாகத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், கைத்தறித் துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜ், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, எம்எல்ஏ}க்கள் என்.எஸ்.நடராஜ், தோப்பு என்.டி.வெங்கடாசலம் பங்கேற்கின்றனர்.