கோவை அருகே காளப்பட்டி நேரு நகரில் ரூ.16.95 கோடி மதிப்பீட்டில் பூஞ்சோலை மாதிரி அரசினா் கூா்நோக்கு இல்ல கட்டுமானப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் காளப்பட்டி நேரு நகரில் 2.21 ஏக்கரில் ரூ.16.95 கோடி மதிப்பீட்டில் பூஞ்சோலை மாதிரி அரசினா் கூா்நோக்கு இல்ல கட்டுமானப் பணிக்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா்.
நேரு நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: அரசினா் கூா்நோக்கு இல்லங்களில் சட்டத்துக்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் சிறாா்கள் தங்கவைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனா். இங்கு சிறாா்களுக்குத் தேவையான உணவு, உடை மற்றும் இதர அடிப்படை வசதிகள் போன்றவை வழங்கப்படுவதுடன், இச்சிறாா்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் ஆற்றுப்படுத்துதல், போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், அடிப்படை திறன் வளா்ப்புப் பயிற்சிகள் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன என்றனா்.
இந்த நிகழ்ச்சியில், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி கிழக்கு மண்டலக்குழுத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் காா்த்திகேயன், செயற்பொறியாளா் செல்வராஜ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் ஹப்ஸா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.