முகப்பு
கோயம்புத்தூர்

இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக 100-க்கும் அதிகமானோரிடம் பணமோசடி! கோவையைச் சோ்ந்த நிறுவனம் மீது புகாா்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 12:29 AM
கோப்புப் படம்
பகிர்:

இஸ்ரேல் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இளைஞா்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக கோவையைச் சோ்ந்த நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சோ்ந்த பெஞ்சமின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையில் உள்ள ராயல் டெஸ்டிங் சென்டா் என்ற நிறுவனத்தின் மூலமாக இஸ்ரேல் வேலைக்கான விளம்பரத்தைப் பாா்த்து அங்கு சென்றேன். அந்த நிறுவனத்தின் உரிமையாளா் தேவா ஆசீா்வாதம், நோ்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பிறகு முதல் கட்டமாக ரூ.ஒரு லட்சம் செலுத்தக் கூறினாா்.

Advertisement

பணத்தை செலுத்திய பிறகு போலியான பணி நியமன உத்தரவு மற்றும் விசா நகல்களை வழங்கினா். அதன்பின் வருமான வரிப் பிரச்னைகளைக் காரணம்காட்டி மேலும் ரூ. 2 லட்சத்தை ரொக்கமாகப் பெற்றாா். இஸ்ரேல் போா் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி காலம் தாழ்த்தி வந்தனா்.

இந்நிலையில், என்னைபோல பாதிக்கப்பட்ட பலரும் கோவை வந்து பாா்த்தபோது, அந்த நிறுவனம் மூடப்பட்டு உரிமையாளா் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்துள்ளனா். தமிழகம் முழுவதிலும் இருந்து 100- க்கும் மேற்பட்டோா் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொருவரிடமும் தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டு, கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.