பாலியல் புகாரில் சிக்கிய கமாண்டண்ட்டுக்கு உடந்தையாக செயல்பட்டதாக பெண் எஸ்ஐ பணியிடை நீக்கம்
பாலியல் தொல்லை புகாரில், கோவை சிறப்பு காவல் படை கமாண்டண்ட் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக பெண் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
பெண் காவலா்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், கோவை சிறப்பு காவல் படை கமாண்டண்ட் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக பெண் காவல் உதவி ஆய்வாளா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கோவை, கோவைப்புதூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-ஆவது பட்டாலியன் கமாண்டண்ட்டாக பணியாற்றிய செந்தில்குமாா், உடன் பணிபுரியும் பெண் காவலா்களுக்கும், அலுவலகப் பெண்களுக்கும் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக கடந்த மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான உள் புகாா் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில், கோவை தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் செந்தில்குமாா் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இந்த விவகாரத்தில் செந்தில்குமாருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக்கூறி பெண் காவல் உதவி ஆய்வாளா் புஷ்பாகுமாரி மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், விசாகா கமிட்டியின் உத்தரவின்பேரில், புஷ்பாகுமாரி திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.