கோவையில் மூதாட்டிகளிடம் 7.5 பவுன் பறிப்பு
கோவையில் மூதாட்டிகளிடம் 7.5 பவுன் நகையை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றுள்ளனர்.
கோவையில் மூதாட்டிகளிடம் 7.5 பவுன் நகையை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் முத்து சுப்பிரமணியம். இவரது மனைவி அலமேலு (68). இவர்கள் இருவரும் ரயில் நிலையம் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர். அவர்களது வாகனம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே வந்தபோது அவர்களது இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த மர்ம நபர்கள் இருவர் அலமேலு கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து, அலமேலு அளித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்:
கோவை டாடாபாத், 3-ஆவது வீதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் பாபு. இவரது மனைவி தீபா சந்தோஷ் (62). இவர், கோயிலுக்குச் செல்வதற்காக அதே பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தீபா சந்தோஷ் அணிந்திருந்த 1.5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து, தீபா சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நிகழாண்டில் 50 பெண்களிடம் நகைப் பறிப்பு
கோவை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 10 மாதங்களில் 50 பெண்களிடம் நகைப் பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாகும்.
இதுகுறித்து, குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறியதாவது:
கோவை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 2016-ஆம் ஆண்டு 45 பெண்களிடம் நகைப் பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பறிபோன நகைகளின் மதிப்பு ரூ. 19 லட்சம் ஆகும். இதில், 33 பேரிடம் நகையைப் பறித்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளன. 2017-ஆம் ஆண்டில் 10 மாதங்களில் 50 பெண்களிடமிருந்து ரூ. 23 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிக்கப்பட்டுள்ளன.
இதில், 45 பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு ரூ. 20 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றனர்.