இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் அளவுக்கு அதிகமான நகைகளைக் கொண்டு வந்த 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொழும்புவில் இருந்து கோவை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு கொழும்புவில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்த விமானப் பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் தங்களது பைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 1.7 கிலோ தங்க நகைகளைக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் அவர்கள் நான்கு பேருக்கும் அபராதம் விதித்தனர். அந்தத் தொகையை அவர்கள் செலுத்தியதை அடுத்து அவர்களிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன.