இயற்கை வேளாண் நாற்றுப் பண்ணையைப் பார்வையிட்ட அரசு சிறப்புப் பயிற்சி மைய மாணவர்கள்
மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பயிற்சி மையங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பயிற்சி மையங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மேட்டுப்பாளையம், ஈடன் அங்கக நாற்றுப் பண்ணையை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.
குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின்கீழ் மேட்டுப்பாளையம் பகுதியில் கல்லாறு, எஸ்.எம்.நகர், அறிவொளி நகர், ஆலாங்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் சிறப்புப் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் 9 முதல் 14 வயது வரை உள்ள 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 2-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு மத்திய அரசு மூலமாக கல்வி உபகரணங்கள், விளையாட்டுச் சாதனங்கள், வாழ்க்கைத் தொழில் கல்வி பயிற்சி உள்பட இரண்டு ஆண்டு காலத்துக்கு மாதம் ரூ. 400 கல்வி ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தாவரங்கள் குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பட்டறிவுப் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இயற்கை வேளாண்மை குறித்து அறியும்விதமாகப் 45 மாணவ, மாணவிகள் மற்றும் சிறப்புப் பயிற்சி மையப் பயிற்சியாளர்கள் மேட்டுப்பாளையம் ஈடன் அங்கக நாற்றுப் பண்ணைக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தனர்.
தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் விஜயகுமார் தலைமையில் வந்த அவர்களை ஈடன் இயற்கை வேளாண் நாற்றுப் பண்ணை நிறுவனர் ஈடன் ராஜரத்தினம், பண்ணை மேலாளர்கள் சுரேஷ், தனலட்சுமி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் பண்ணையில் நடைபெற்று வரும் பல்வேறு இயற்கை வேளாண் முறைகளைப் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற பயிற்சி முகாமில் நோனி, முள்சீதா, ரணகள்ளி ஆகிய மருத்துவத் தாவரங்கள் குறித்தும், வீட்டில் வளர்க்கக்கூடிய முருங்கை, கொய்யா, மாதுளை, பப்பாளி ஆகியவற்றின் பயன் மற்றும் வளர்ப்பு முறை குறித்தும், இலையிலிருந்தும், குளோனிங் முறை மூலமாக நாற்று உற்பத்தி செய்வது குறித்தும், இயற்கை முறை விவசாயம் குறித்தும் பண்ணை நிறுவனர் ராஜரத்தினம் செயல்முறை விளக்கத்துடன் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் டாக்டர் நந்தகுமார், ஜெயராமன், அப்துல்லா, பயிற்சி மைய ஆசிரியர்கள், களப் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.