கோவையில் மருந்துக்கடை உரிமையாளர் கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
கோவை, ஆர்.எஸ்.புரம், டி.வி.சாமி சாலையைச் சேர்ந்தவர் தன்ராஜ் (42). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் மருத்துக்கடை நடத்தி வருகிறார். இவர் சௌரிபாளையத்தைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபரான அஸ்வின் (33) என்பவரிடம் ரூ. 22 லட்சம் கடனாகப் பெற்றார். இந்தப் பணத்தை திருப்பிச் செலுத்தாமல் தன்ராஜ் தாமதப்படுத்தி வந்ததாராம். இதையடுத்து, அஸ்வின் தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து தன்ராஜை பிப்ரவரி 7-ஆம் தேதி காரில் கடத்திச் சென்று தாக்கியுள்ளார். பின்னர் அடுத்தநாள் காலை விடுவித்துள்ளனர்.
இதுகுறித்து தன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக நிதி நிறுவன அதிபர் அஸ்வின், கார்த்திக் கண்ணன், அவிநேஷ், நோமன், பிரேம், புதுச்சேரியைச் சேர்ந்த பால்ஜோஸப், சென்னை- வேளச்சேரியைச் சேர்ந்த ஜான் ராபிந்த் ஆகிய 7 பேரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கோவை, வடவள்ளியை அடுத்த லிங்கனூரைச் சேர்ந்த எம். அருண்ஹாசன் (34), ஹரி (38) ஆகியோரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள டாஸ்மாக் பார் உரிமையாளரைத் தாக்கிய வழக்கில் அருண்ஹாசன் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையின்போது, அவருக்கு தன்ராஜ் கடத்தல் வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் ஹரியும் கைது செய்யப்பட்டார்.
வடவள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள், சிங்காநல்லூர், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையங்களில் சந்தன மரக்கடத்தல் உள்ளிட்ட 23 வழக்குகள் அருண்ஹாசன் மீது உள்ளன. மேலும், ஏற்கெனவே இரு முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.