நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் கலைமகள் விழா நடைபெற்றது.
18 கல்வி நிறுவனங்களை உள்ளடங்கிய இந்த வித்யாலயத்தில் கடந்த 70 ஆண்டுகளாக நவராத்திரியை முன்னிட்டு முத்தமிழால் முப்பெருந்தேவியரைப் போற்றும் வகையில் மூன்று நாள்கள் கலைமகள் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாணவ, மாணவியர் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதல்நாள் விழாவை வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.தொடர்ந்து வித்யாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் நவராத்திரி குறித்து பல்வேறு தலைப்புகளில் பேசினர். இதையடுத்து வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியின் செயலர் நிர்மலேஷானந்தர் ஆசியுரை வழங்கினார்.
சிகாகோ சிங்கம் என்ற தலைப்பில் கலாநிலைய நடுநிலைப்பள்ளியின் செயலர் சுவாமி ஹரிவிரதானந்தர் வித்யாலய இசை ஆசிரியர்களோடு புதன்கிழமை இசை நிகழ்ச்சி நடத்தினார். இறுதியில் பொருளாளர் சுவாமி சஹனானந்தர் ஆசியுரை கூறினார்.வித்யாலயத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களையும் சேர்ந்த மாணவ, மாணவியர் வியாழக்கிழமை நடனம் மற்றும் நாடகங்களை நடத்திக் காண்பித்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பக்திவ்ரதானந்தர் ஆசியுரை கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை வித்யாலயா செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.