கண்ணம்பாளையத்தில் பெண்ணை மிரட்டி 17 பவுன் கொள்ளை
சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் தனியே இருந்த பெண்ணை
சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் தனியே இருந்த பெண்ணை மிரட்டி 17 பவுன் நகையை சனிக்கிழமை இரவு கொள்ளை அடித்துச் சென்றனர்.
சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் உள்ள நஞ்சப்ப தேவர் வீதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர், ராவத்தூரில் உள்ள தனியார் நூற்பாலையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இளவரசி (33), மகன் மனோஜ் (7) ஆகியோர் வீட்டில் தனியே இருந்துள்ளனர்.
அப்போது வீட்டின் மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த பருப்பை எடுத்து வருவதற்காக இளவரசி சென்றபோது இரண்டு பேர் வீட்டினுள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
அதைப் பார்த்த இளவரசி உடனடியாக கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார். அப்போது, கொள்ளையர்கள் இருவரும் மனோஜை பிடித்து அவரது கழுத்தைக் கத்தியால் அறுத்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, இளவரசி அணிந்திருந்த 7 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.