பெருமாநல்லூர் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகைப் பறித்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
பெருமாநல்லூர் அருகே மொய்யாண்டம்பாளையம், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (60). இவரது மனைவி சரஸ்வதி (56). இவர் கடந்த மாதம் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் சரஸ்வதி அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றார்.
இது குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், பெருமாநல்லூர் போலீஸார் குன்னத்தூர் சாலையில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் (27) என்பதும், இவர் சரஸ்வதியிடம் நகைப் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, பெருமாநல்லூர் போலீஸார் ராஜசேகரைக் கைது செய்தனர்.