ஓய்வூதியம் வங்கியில் செலுத்தப்படாததைக் கண்டித்து அரசுப் போக்குவரத்து தலைமை பணிமனையை முற்றுகையிட்டு ஓய்வூதியர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் ஓய்வூதியத் தொகையை வங்கியில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் கோவை கோட்டத்துக்குள்பட்ட ஓய்வூதியர்களுக்கு தற்போது வரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதையடுத்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தலைமை பணிமனையில் ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் திரண்டு பணிமனையின் கதவை மூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்துகள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ஓய்வூதியர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து ஓய்வூதியர்கள் அனைவரும் பணிமனை வளாகத்திலேயே அமர்ந்தனர். உடனடியாக ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.