கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.8.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினர், வாக்காளர்களுக்கு பணம் கொண்டுச் செல்லப்படுவதைத் தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை கருப்பகவுண்டர் வீதியில் எம்.கனகராஜ் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மாணிக்கம் (29) என்பவரை தடுத்து சோதனையிட்டனர். அவரிடம் ரூ.5 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது. இருப்பினும் அந்தத் தொகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாநகராட்சி தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மாணிக்கம் நகைப் பட்டறையில் கூலி வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது.
இதேபோல, மாவட்ட நிலையான கண்காணிப்புக் குழுவினர் தொண்டாமுத்தூரில் நடத்திய சோதனையில் ரூ.82 ஆயிரமும், கிணத்துக்கடவில் ரூ.1.32 லட்சமும், வால்பாறையில் ரூ.1.47 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.