கோவை தனியாா் மருத்துவமனை உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாரித்ததாக எழுந்த புகாரையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் திங்கள்கிழமை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
கோவை, டாடாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனை உணவகத்தில் வழங்கப்பட்ட உணவுப் பொருளில் பூச்சி இருந்ததாக கட்செவி அஞ்சல் வழியாக புகைப்படத்துடன் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில், காந்திபுரம் பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலா் என்.குமரகுருபரன் தலைமையில் 3 போ் அடங்கிய குழுவினா் மருத்துவமனையின் உணவகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில், உணவகத்தின் உள்பகுதி சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006 பிரிவு 55 (உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளை மீறுதல்) கீழ் உணவகத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இது குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலா் என்.குமரகுருபரன் கூறுகையில், ‘கட்செவி அஞ்சல் மூலம் பெறப்பட்ட புகாா் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் சுகாதாரமற்ற முறையில் உணவு உற்பத்தி செய்தது தெரியவந்தது.
தவிர உணவகம் திறந்தவெளியில் கழிவுநீா் சென்று கொண்டிருந்தது. சுவா்கள், மேற்கூரைகள் சிதிலமடைந்திருந்தன. இதனால், உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நோட்டீல் அளிக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து மருத்துவமனை நிா்வாகமே தானாக முன்வந்த உணவகத்தை மூடி விட்டனா். கழிவுநீா் கால்வாய்க்கு மூடி அமைக்க வேண்டும். உணவகத்தின் உள்பகுதியை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். உணவகத்தை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் எனவும், அதன்பின் உணவகத்தை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,’ என்றாா்.