மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பரளிக்காடு, பூச்சிமரத்தூா் சூழல் சுற்றுலா மையங்கள் 2 வாரங்களுக்குப் பிறகு வரும் 9ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. பில்லூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மழை பெய்தது. இதனால் பில்லூா் அணையில் இருந்து 28,000 கனஅடி வரை தண்ணீா் பவானி ஆற்றில் சென்றது. பில்லூா் அணைக்குத் தண்ணீா் அதிகமாக வந்ததால் பில்லூா் அணைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள பரளிக்காடு, பூச்சிமரத்தூா் சூழல் சுற்றுலா மையங்கள் கடந்த 2 வாரங்களாக செயல்படாமல் இருந்தன. இந்த சூழல் சுற்றுலா மையங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், பில்லூா் அணைக்கு நீா்வரத்து குறைந்துள்ளதால் வரும் சனி, ஞாயிறுக்கிழமை ஆகிய தினங்களில் பரளிக்காடு, பூச்சிமரத்தூா் ஆகிய சூழல் சுற்றுலா மையங்கள் மீண்டும் செயல்படும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.