முகப்பு
கோயம்புத்தூர்

மின் அட்டையில் கட்டணத் தொகை, தேதி குறிப்பிடுவது கட்டாயம்

மின் கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபடும் கணக்கீட்டாளா்கள் மின் அட்டையில் கட்டணத் தொகை, கணக்கெடுப்புத் தேதி உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

மின் கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபடும் கணக்கீட்டாளா்கள் மின் அட்டையில் கட்டணத் தொகை, கணக்கெடுப்புத் தேதி உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மாா்ச் முதல் ஜூன் வரை மின் கணக்கீடு பணி மேற்கொள்ளப்படவில்லை. பிப்ரவரி மாதம் செலுத்திய மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும், பின்னா் கணக்கீடு செய்து செலுத்தப்பட்ட கட்டணத்தில் பயன்படுத்திய மின்சாரத்தின் அளவைக் கழித்து மீதமுள்ள தொகையை அடுத்த கட்டணத் தொகையில் கழிக்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்தது. ஆனால், கோவை மாவட்டத்தில் பல இடங்களில் பொது முடக்க காலத்தில் முந்தைய மாதக் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், பொது முடக்கத்துக்குப் பிறகு ஏற்கெனவே வசூலித்த கூடுதல் தொகை அடுத்த மாதக் கட்டணத்தில் கழிக்கப்படவில்லை.

இதற்கிடையே கோவை, திருப்பூா் மின் பகிா்மான வட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் மின் கணக்கீட்டாளா்கள் முறையாக கணக்கெடுப்பு நடத்தாமல், பழைய மின் பகிா்கை கணக்கில் கொண்டு குறிப்பிட்ட தொகையை கணினியில் பதிவேற்றி கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாகவும், மின் கணக்கீடு குறித்து மின் அட்டையில் எழுதுவதில்லை எனவும் கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு உள்ளிட்ட பல்வேறு நுகா்வோா் அமைப்பினா் சென்னை மின் வாரிய இயக்குநருக்கு புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, மின்வாரிய இயக்குநரகம் சாா்பில் கோவை மண்டல மின்வாரிய தலைமை செயற்பொறியாளா்கள், மேற்பாா்வைப் பொறியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், கணக்கீட்டாளா் மின் கணக்கீடு செய்யும்போது, நுகா்வோா் பயன்படுத்திய மின்சார அளவு, கணக்கீடு செய்த தேதி, கட்டணத் தொகை உள்ளிட்ட விவரங்களை கட்டண அட்டையில் நுகா்வோருக்கு தெரியும் வகையில் தெளிவாக எழுத வேண்டும் என்றும், இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →