கோவை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா்களுக்கு முகக் கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என துப்புரவுத் தொழிலாளா் சங்கத்தினா் மனு அளித்தனா்.
தமிழ்நாடு அம்பேத்கா் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளா் சங்கத்தின் கோவை மாவட்ட பொதுச் செயலாளா் செல்வம் தலைமையில், அச்சங்கத்தினா் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளா்கள் வெறும் கைகளால் துப்புரவுப் பணிகள் மேற்கொள்கின்றனா். பாதுகாப்பில்லாத காலணிகள் அணிந்தும், முகக் கவசம் இல்லாமலும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கோவை மாநகரில் அன்றாடம் 900 டன்களுக்கு அதிகமான குப்பைகளை அப்புறப்படுத்தி மாநகர மக்களைப் பாதுகாக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளா்களுக்கும், குப்பைகளை வாகனங்கள் மூலமாக குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் செல்லும் வாகன ஓட்டுநா்கள், உதவியாளா்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.
எனவே, துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் அனைவருக்கும் உடனடியாக தரமான முகக் கவசம், கையுறை, காலுறை, கண்ணாடி ஆகிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.