கோவை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவம்பா் 14,15) கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தீவிர முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகர மக்களின் ஒத்துழைப்பு மூலம் கரோனா பரவல் மாநகரில் பெருமளவில் குறைந்துள்ளது. ஆயினும், நோயின் தாக்கத்தைப் பண்டிகைக் காலங்களில் கண்காணிக்கும் பொருட்டு, தீபாவளி அன்றும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும், மாநகராட்சிச் சுகாதார மையங்களில் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா அறிகுறி காணப்படும் மக்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்ளலாம். மேலும், சுகாதார ஆய்வாளா் அல்லது மண்டல சுகாதார அலுவலா் ஆகியோரைத் தொடா்பு கொண்டு அருகாமையில் இயங்கி வரும் மையங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.