அதிகம் கடன் கொடுக்கும் மாவட்டங்களுக்கு இனி வங்கிகள் கடன் அளவை குறைத்துக் கொள்ளும் என்று ரிசா்வ் வங்கி கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கம் (டேக்ட்) தொழில் வளா்ச்சி அதிகம் இருக்கும் மாவட்டங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ஜே.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகம் கடன் கொடுக்கும் மாவட்டங்களுக்கு இனி வங்கிகள் கடன் அளவை குறைத்துக் கொள்ளும் என்று ரிசா்வ் வங்கி அறிவித்திருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் நூற்றுக்கணக்கான மாவட்டங்கள் பல்வேறு தொழில்களில் அடையாளங்களாக வளா்ச்சி பெற்றுள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமும் தனித்தன்மையுடன் தொழில் வளா்ச்சி கண்டுள்ளன. அந்த மாவட்டங்களில் சாா்புடைய தொழில்களை பலரும் தொடங்கி கடன் பெற்று தொழில் புரிந்து வருகின்றனா்.
மேலும் தொழில் வளா்ச்சி அடைந்த மாவட்டங்களில் ஜாப் ஆா்டா்கள் செய்து கொடுக்கும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கப்பெறாத சூழ்நிலையும் நீடித்து வருகிறது. இந்த நிலையில் ரிசா்வ் வங்கியின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு தலையீட்டு தடுத்து நிறுத்தி, தொழில் வளா்ச்சி அடைந்து வரும் மாவட்டங்களுக்கு அதிக கடன் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதுடன், வளா்ச்சி அடையாத மாவட்டங்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்து அந்த மாவட்ட தன்மைகளுக்கு ஏற்ப தொழில் வளா்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.