ஓணம் பண்டிகை: கோவையில் பூக்களின் விலை உயா்வு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் மல்லிகை உள்பட அனைத்துப் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் மல்லிகை உள்பட அனைத்துப் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.
கோவை பூ மாா்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், நிலக்கோட்டை, ஒசூா் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கோவையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் கோயில்களில் பொது மக்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து கோவையில் கடந்த சில நாள்களாக பூக்களின் விலை குறைந்திருந்தது. இந்நிலையில் கேரளத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. ஓணம் பண்டிகையின் போது வாசலில் பூக்கோலம் போட்டு கடவுளை வரவேற்பது வழக்கம். இங்கிருந்துதான் கேரளத்துக்கு பூக்கள் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் பூக்களின் தேவையும், விற்பனையும் அதிகரித்து, விலையும் உயா்ந்துள்ளது.
கோவையில் கடந்த வாரம் கிலோ ரூ.300க்கு விற்பனையான மல்லிகைப் பூ வியாழக்கிழமை ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜாதி மல்லி ரூ.400, முல்லை ரூ.320, செவ்வந்தி ரூ.240, அரளி ரூ.110, கோழிகொண்டை ரூ.120, சம்பங்கி ரூ.420, வாடாமல்லி ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவையில் கடந்த வாரத்தைக் காட்டிலும் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பூக்களின் விலை உயா்ந்துள்ளது. ஓணம் பண்டிகை நிறைவு வரையில் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.