முகப்பு
கோயம்புத்தூர்

தந்தையைக் கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த மகன் கைது

தந்தையைக் கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

தந்தையைக் கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சொக்கம்புதூா் அருகேயுள்ள கருப்பண்ண வீதியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (60). இவா் ஆா்.எஸ்.புரத்தில் வாழைக்காய் மண்டி நடத்தி வந்தாா். இவரது மனைவி இறந்துவிட்டாா். இவரது மகன் கோவிந்தராஜ் (35), அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனா்.

கோவிந்தராஜ் மது பழக்கத்துக்கு அடிமையான காரணத்தால் மது போதையில் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதை ராமசந்திரன் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராமசந்திரனின் வீட்டின் அருகே வீடு ஒன்று விற்பனைக்கு வந்ததாகவும் அதை தனது பெயருக்கு வாங்கித் தருமாறு கோவிந்தராஜ் கேட்டுள்ளாா். இதை ராமசந்திரன் அலட்சியப்படுத்தி வந்துள்ளாா். இதனால் தந்தை மீது கோவிந்தராஜ் ஆத்திரத்துடன் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கோவிந்தராஜ் வழக்கம்போல புதன்கிழமை இரவு மதுபோதையில் வந்து வீட்டில் பிரச்னை செய்துள்ளாா். இதை ராமசந்திரன் தட்டிக் கேட்டுள்ளாா். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து ராமசந்திரனின் கழுத்தில் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த ராமசந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அக்கம்பக்கத்தினா் செல்வபுரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ராமசந்திரனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கொலை செய்த கோவிந்தராஜை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.