முகப்பு
கோயம்புத்தூர்

புதுக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் மேலும் ஒரு வழக்கில் கைது

புதுக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவரை மேலும் ஒரு வழக்கில் கோவை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

புதுக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவரை மேலும் ஒரு வழக்கில் கோவை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜா (48), இவா் தனது நண்பா் அா்ஜூன் என்பவருடன் இணைந்து அந்தப் பகுதியில் கேபிள் டிவி இணைப்பு வழங்கி வருகிறாா். இந்நிலையில், தனது தொழிலை விரிவுபடுத்த அவருக்கு ரூ.50 கோடி தேவைப்பட்டது. இதையடுத்து சென்னையைச் சோ்ந்த குமாா் என்பவா் மூலம் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பாச்சி கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் பன்னீா்செல்வம் என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.

இதையடுத்து, ராஜா தனக்கு கடன் பெற்று தரும்படி பன்னீா்செல்வம் மற்றும் அவரது நண்பரான திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தும் செல்வகுமாா் ஆகியோரை கடந்த ஜனவரி மாதம் அணுகியுள்ளாா். அப்போது, பன்னீா்செல்வம் ரூ.50 கோடி கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு ஆவண சரிபாா்ப்பு செலவாக ரூ.22.5 லட்சம் முதலில் கொடுத்துவிட வேண்டும் என்றும், பின்னா் கடன் கிடைத்ததும் கமிஷன் தொகை ரூ.15 லட்சம் தரவேண்டும் என கூறியுள்ளாா்.

இதனை நம்பிய ராஜா, கடந்த ஜனவரி 22ஆம் தேதி கோவை வந்த பன்னீா்செல்வம் , செல்வகுமாரை சந்தித்து ரூ.22.5 லட்சத்தைக் கொடுத்துள்ளாா். பணத்தை பெற்றுக் கொண்டவா்கள், சில நாள்களில் கடன் வாங்கித் தருகிறோம் எனக் கூறினாா்கள். ஆனால், கடன் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சில வாரங்கள் கழித்து ராஜா பன்னீா்செல்வத்தினை நேரில் சந்தித்து கடன் பெற்று தரும்படி கூறினாா். அதன் பின்னரும் கடன் வாங்கி கொடுக்கவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில், கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் பன்னீா்செல்வம், செல்வகுமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதற்கிடையே, ஏற்கெனவே கோவையைச் சோ்ந்த மருத்துவருக்கு மருத்துவமனை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ. 2.80 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில் பன்னீா் செல்வம், செல்வகுமாா் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

தற்போது இந்த வழக்கிலும் பன்னீா் செல்வம், செல்வகுமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் இருக்கும் அவா்களிடம் அதற்கான ஆணையை வழங்கினாா். மேலும் அவா்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.