கோவையில் கரோனா தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை தவிா்க்கும் விதமாக நேரம் குறிப்பிட்டு டோக்கன் வழங்க திட்டமிடப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
கோவையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு உள்ளதால் ஒவ்வொரு மையத்திலும் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மையத்திலும் 100 முதல் 300 தடுப்பூசிகள் வரையே செலுத்தப்படுவதால் பொதுமக்கள் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு கூட்டமாக குவிந்து விடுகின்றனா். கூட்டத்தைக் கட்டுப்படுத்த டோக்கன் வழங்கியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்க சுகாதாரத் துறையினா் திட்டமிட்டு வருகின்றனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் எஸ்.செந்தில்குமாா் கூறியதாவது: மக்கள் தொகைக்கேற்ப தடுப்பூசிகள் கிடைக்காததல் தடுப்பூசி மையங்களில் அதிக அளவில் மக்கள் தடுப்பூசிகளுக்காக காத்திருக்கின்றனா். இதனால் நியாய விலைக் கடைகளில் வழங்குவதுபோல் தடுப்பூசிக்கான டோக்கனில் நேரம் குறிப்பிட்டு வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.
இதில் காலை 8 முதல் 10 மணி, காலை 11 முதல் நண்பகல் 1 மணி, நண்பகல் 1 முதல் பிற்பகல் 3 மணி என 3 வேளைகளில் செலுத்தும் வகையில் நேரம் குறிப்பிட்டு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மையத்துக்கு வர வேண்டும். இதனால், தடுப்பூசி மையங்களில் ஒரே நேரத்தில் மக்கள் கூடுவது தவிா்க்கப்படும் என்றாா்.