முகப்பு
கோயம்புத்தூர்

நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் பணி: தொழிலாளா் உதவி ஆணையா் வலியுறுத்தல்

கோவை மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் பணியிடங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

கோவை மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் பணியிடங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் 20 மற்றும் அதற்குமேல் பணியாளா்களை பணியமா்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு சமவேலை வாய்ப்பு கொள்கைகளை, மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2015 பிரிவு 21 இன் படி நடைமுறைப்படுத்த வேண்டும்.

அவா்களுக்கான பணியிடங்களைக் கண்டறிந்து குறைந்தது 5 சதவீதம் பணி வாய்ப்பு வழங்க வேண்டும்.

20 நபா்களுக்கு மேல் பணியாளா்களைப் பணியமா்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத் திறனாளிகள் தொடா்பான விவரங்களை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் இணையத்தில் உள்ள ’கூகுள் சீட்‘ படிவத்தில் பூா்த்தி செய்ய வேண்டும்.

உணவு, கடைகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் மாற்றுத் திறனாளிகளை பணி நியமனம் செய்வதுடன், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீா், இருக்கை வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்கும் நிறுவனத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மூலம் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.