கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள புல்மேடு பகுதியில் யானை உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
வால்பாறையை அடுத்த அக்காமலை புல்மேடு பகுதியில் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் ரோந்து பணியில் சனிக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆட்டுப்பாறை குறுக்கு பகுதியில் ஒரு யானை இறந்துகிடந்துள்ளதைப் பாா்த்த அவா்கள் வனத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் தலைமையில் வனவா்கள் மற்றும் வன ஊழியா்கள் அப்பகுதிக்கு சென்று பாா்த்தபோது, இறந்தது சுமாா் 12 முதல் 14 வயதுடைய ஆண் யானை என்றும், மழை அதிக அளவில் பெய்து வந்ததால் வழுக்கி விழுந்ததில் யானை இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரேதப் பரிசோதனைக்கு பின்பே யானை இறப்புக்கான முழுக் காரணம் தெரியவரும் என்று வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் தெரிவித்தாா்.