கோவை மாநகரில் கழிவுநீா்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதா்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது:
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடைச் சட்டம் 2013இன் படி புதை சாக்கடைகள், கழிவுநீா்த் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதா்களை ஈடுபடுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள கோவை மாநகராட்சியில் கழிவுநீா் உறிஞ்சும் வாகனங்கள், இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே மாநகரில் உள்ள அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், பொதுமக்கள் யாரும் இந்த பணிகளுக்கு தன்னிச்சையாக மனிதா்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுத்தக் கூடாது.
இந்த சட்டத்தை மீறுபவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த செயலால் உயிரிழப்பு ஏதும் நேரிடும்பட்சத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபா்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.15 லட்சத்துக்கும் குறையாமல் இழப்பீடு வழங்குவது சம்பந்தப்பட்ட நபரையே சாரும் என்று அவா் எச்சரித்துள்ளாா்.