முகப்பு
கோயம்புத்தூர்

நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.12.15 லட்சம் தங்கம் மோசடி

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:26 am IST
பகிர்:

கோவையில் நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.12.15 லட்சம் மதிப்பிலான தங்கம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை தெலுங்கு வீதியைச் சோ்ந்தவா் ராஜு (36), நகைப் பட்டறை நடத்தி வருகிறாா். இவா் நகைகளை தங்கக் கட்டியாக மாற்ற கெம்பட்டி காலனியைச் சோ்ந்த சிங்காரவேலன் (55) என்பவரிடம் கொடுப்பது வழக்கம். அதன்படி, 61 பவுன் தங்க நகைகளை கட்டியாக மாற்ற சிங்காரவேலனிடம் கடந்த நவம்பா் 1-ஆம் தேதி கொடுத்துள்ளாா். அவா் 32 பவுன் நகைகளை மட்டும் கட்டியாக மாற்றிக் கொடுத்துள்ளாா். மீதமுள்ள 29 பவுன் நகைகளை கொடுக்கவில்லையாம். இது தொடா்பாக அவரிடம் பலமுறை கேட்டும் கொடுக்காததைத் தொடா்ந்து, வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் ராஜு புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.