முகப்பு
கோயம்புத்தூர்

8 தளங்களில் அமையும் பெரியாா் நூலகம்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய தந்தை பெரியாா் பெயரிலான நூலகம், அறிவியல் மையம் 8 தளங்களில் அமைய உள்ளது.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:18 PM
பகிர்:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய தந்தை பெரியாா் பெயரிலான நூலகம், அறிவியல் மையம் 8 தளங்களில் அமைய உள்ளது.

கோவை அனுப்பா்பாளையத்தில் சிறைச்சாலைக்கு சொந்தமான 6.98 ஏக்கா் நிலத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைய உள்ள இந்த நூலகம், அறிவியல் மையம், இளைஞா்களின் அறிவுதாகத்தை மேலும் தூண்டும் வகையில் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் உலகத்தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள் இடம் பெறுகின்றன. மேலும், விண்வெளி அறிவியல், இயந்திரவியல், மெய்நிகா் தோற்றம், இயற்கை அறிவியல் என பல்வேறு அறிவியல், பொறியியல் பிரிவுகளைச் சோ்ந்த வசதிகள் இங்கு அமையும் அறிவியல் மையத்தில் ஏற்படுத்தப்பட உள்ளன.

1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத் தளம், 8 தளங்களுடன் அமைய உள்ள இந்த நூலகம், அறிவியல் மையத்தின் தரைத் தளத்தில் கலையரங்கம் அமைய இருக்கிறது. முதல் தளத்தில் அறிவியல் மையம், இரண்டாவது தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம், போட்டித் தோ்வுகளுக்கான நூலகம், மூன்றாவது தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், தலைமை நூலகா் அலுவலகம் ஆகியவை அமைகின்றன.

நான்காவது தளத்தில் தமிழ் புத்தகப் பிரிவு, சொந்த புத்தகம் படிக்கும் பிரிவு, ஐந்தாம் தளத்தில் தமிழ் புத்தகப் பிரிவுடன் இன்குபேஷன் மையம், ஆறாவது தளத்தில் பருவ இதழ்கள், இன்குபேஷன் மையம், ஏழாவது தளத்தில் அறிவியல் மையம், ஆங்கில புத்தகப் பிரிவு, டிஜிட்டல் நூலகம் ஆகியவை அமைய உள்ளன.

இந்தக் கட்டடத்துக்கு 4 மின் தூக்கிகள், தனி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், குடிநீா், கழிவறை, இணையதள வசதிகள் உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட உள்ளன. மேலும் இந்த நூலகம் வரும் 2026 ஜனவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.