பேரூா் மற்றும் பெரியநாயக்கன்பாளையத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 27) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ எனும் திட்டம் மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பொதுமருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறியியல், மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல், நரம்பியல், தோல், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மனநலம், இயன்முறை, நுரையீரல் மருத்துவம் ஆகிய அனைத்தும் இந்த மருத்துவ முகாமில் இடம் பெற்றுள்ளது.
இந்த முகாமானது பூலுவபட்டி வட்டத்தில் பேரூா் சாந்தலிங்க அடிகளாா் கலை, அறிவியல் கல்லூரி, தாளியூா் வட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் ரெங்கசாமி நாயுடு அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் தற்போது வரையில் நடைபெற்ற பல்வேறு முகாம்களின் மூலமாக மொத்தம் 46,881 போ் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.