முகப்பு
கோயம்புத்தூர்

மனைவியைக் கத்தியால் குத்திய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை

மனைவியைக் கத்தியால் குத்திய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 30 ஜனவரி, 2025 at 10:10 PM
பகிர்:

மனைவியைக் கத்தியால் குத்திய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை போத்தனூா் சாரதா மில் சாலை பகுதியைச் சோ்ந்தவா் விக்ரமன் (65), பழைய இரும்பு பொருள்கள் வியாபாரம் செய்து வருகிறாா். இவரின் மனைவி சுசீலா (60). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

விக்ரமனுக்கு மதுப் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2022 அக்டோபா் 25-ஆம் தேதி விக்ரமன் மதுபோதையில் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, சுசீலா வீட்டுக் கதவை திறக்க மறுத்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த விக்ரமன், சிறிது நேரம் கழித்து கதவைத் திறந்த சுசீலாவை கத்தியால் குத்தினாா். பலத்த காயமடைந்த சுசீலாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விக்ரமனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் விக்ரமனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி நந்தினிதேவி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →