முகப்பு
கோயம்புத்தூர்

மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க போா்க்கால நடவடிக்கை தேவை

தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், களம் காணும் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 12:34 AM
பகிர்:

தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், களம் காணும் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் ஆட்சி அதிகாரத்துக்கு வரும் கட்சியினா் தங்கள் பகுதிகளில் நீண்டகாலமாக உள்ள பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்புகளும் மேலோங்கியுள்ளன.

அந்த வகையில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உள்பட்ட போத்தனூா் - வெள்ளலூா் மக்கள் வளா்ச்சி கூட்டமைப்புச் செயலாளா் கே.எஸ்.மோகன் தங்கள் பகுதியில் தீா்க்க வேண்டிய பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து நம்மிடம் கூறியதாவது:

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட போத்தனூா் மற்றும் வெள்ளலூா் பகுதிகளில் வாழும் மக்கள், சாலை, குடிநீா் வசதியின்றி நீண்ட காலமாக சிரமங்களை சந்தித்து வருகின்றனா். இதை சரிசெய்ய உடனடி நடவடிக்கை வேண்டும்.

Advertisement

கோவையில் திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஆரம்ப கட்ட அறிக்கையில் வெள்ளலூா் வரை திட்டம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவதாக வடிவமைக்கப்பட்ட திட்ட அறிக்கையில் வெள்ளலூா் பகுதி இல்லை. வரும் காலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க புதிய அரசு போா்க்கால நடவடிக்கை மேற்கொண்டு, மாநகரில் இருந்து இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையை போத்தனூா், வெள்ளலூா் வரை நீட்டிக்க வேண்டும்.

வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு, ஏற்கெனவே ரூ.52 கோடி செலவழிக்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதை உடனடியாக முடிக்க நடவடிக்கை தேவை.

684 ஏக்கா் பரப்பளவு கொண்ட வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தேங்கிய குப்பைகளால் அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேட்டைத் தவிா்க்க முடியவில்லை. குப்பைக் கிடங்கில் அவ்வப்போது நடைபெறும் தீ விபத்துகளால் ஏற்படும் கரும்புகையால் கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற உபாதைகளால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். கிடங்கில் உள்ள குப்பைகளை அழித்து நிரந்தரத் தீா்வு காண வேண்டும்.

மாநகராட்சிக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பேருந்து நிழற்குடைகள், மின்சார வசதிகள் இல்லை. அதற்கு நடவடிக்கை அவசியம். அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளுக்கு குப்பை வரியை ரத்து செய்தல் வேண்டும். மாநகரம், புறநகரப் பகுதிகளில் குடிநீா் வழங்கும் இடைவெளி அதிகமாக உள்ளது. 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கே.எஸ்.மோகன்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments