முகப்பு
கோயம்புத்தூர்

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

கோவையில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்திய தனியாா் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 5:02 AM
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:47 PM

கோவையில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்திய தனியாா் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் நளினா (58). இவா் தனது ஆட்டோவில் கடந்த 8-ஆம் தேதி காலை பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தாா். சுங்கம் அருகே ஆட்டோவை அவா் திருப்ப முயன்றாா்.

அப்போது, போத்தனூரிலிருந்து சிந்தாமணிபுதூா் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இவரது ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

அங்கிருந்த பொதுமக்களும், போக்குவரத்து காவலா்களும் ஆட்டோவுக்குள் சிக்கியிருந்த நளினா மற்றும் மாணவ, மாணவிகளை மீட்டனா். நளினா மட்டும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பள்ளி மாணவ, மாணவிகள் காயமின்றி தப்பினா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், பொள்ளாச்சியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் சிவசக்தி (29), நேர மேலாண்மை காரணமாக பேருந்தை அதிவேகமாகவும், அபாயகரமாகவும் ஓட்டிவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, விபத்துக்கு காரணமான ஓட்டுநா் சிவசக்தி மற்றும் அதிவேகமாகச் செல்வதைத் தடுக்காமல் உடந்தையாக இருந்த நடத்துநா் பிரபு (29) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

நேரப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக பேருந்துகளை அதிவேகமாக இயக்கி விபத்துகளை ஏற்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவா் என காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.