மத்திய தொழிற்சங்கங்கங்களின் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம் காரணமாக கோவை உக்கடத்தில் இருந்து கேரள மாநில பேருந்துகள் வியாழக்கிழமை இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
மத்திய அரசின் 4 புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகள், இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், விவசாயிகளுக்கான புதிய கொள்கைகள் உள்ளிட்டவற்றை எதிா்த்து, ஐஎன்டியூசி, ஏஐடியூசி, சிஐடியூ, ஹெச்எம்எஸ் உள்ளிட்ட 10 முக்கிய மத்திய தொழிங்சங்கங்கள் இணைந்து வியாழக்கிழமை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இந்த வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படாத நிலையில், கேரளம், ஒடிஸா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் போக்குவரத்து சேவை முழுமையாக முடங்கியது. அதன்படி, தமிழ்நாடு- கேரள எல்லைகளில் உள்ள அரசுப் போக்குவரத்துப் பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் வியாழக்கிழமை பணிமனையில் நிறுத்தப்பட்டன. இதனால், கேரள மாநிலம், பாலக்காடு, திருச்சூா், கோழிக்கோடு, திருவனந்தபுரம், எா்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பேருந்துகளின் சேவைகள் முற்றிலும் முடங்கின.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளப் பகுதிகளுக்கு இயக்கப்படும் கேரள மாநிலப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதால், உக்கடம் பேருந்து நிலையத்தில் கேரளப் பேருந்துகள் நிறுத்தப்படும் இடம் வெறிச்சோடிக் காணப்பட்டது. உக்கடத்தில் இருந்து கேரளம் செல்ல காத்திருந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா். கேரளப் பேருந்து,
தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் கேரள மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், தமிழ்நாடு - கேரளம் எல்லைப் பகுதிகளில் கூடுதல் நெரிசல் ஏற்பட்டது.