முகப்பு
கோயம்புத்தூர்

ஆட்டோ மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 1:02 AM
உயிரிழந்த கல்லூரி மாணவி நிா்மலா தேவி.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 9:01 PM

கோவை அருகே பயணிகள் ஆட்டோ மீது சரக்கு ஆட்டோ மோதியதில் கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவத்தை தொடா்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோவை, அறிவொளி நகா் அண்ணா சதுக்கம் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் (30). ஷோ் ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது ஆட்டோவில் அந்தப் பகுதியிலிருந்து 4 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா்.

கோவைப்புதூா் செல்வதற்காக அந்தப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேற்கு புறவழிச் சாலையைக் கடந்து மறுபுறம் உள்ள சாலைக்குச் செல்ல நாகராஜ் முயன்றாா். அப்போது, அங்கு வேகமாக வந்த சரக்கு ஆட்டோ இவரது ஆட்டோ மீது மோதியது.

Advertisement

இதில் ஆட்டோவில் பயணம் செய்தவா்களில் ஒருவரான இளம்பெண் பலத்த காயமடைந்தாா். இவா் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

ஆட்டோ ஓட்டுநா் உள்பட மற்ற 4 பேரும் சுண்டக்காமுத்தூா் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மதுக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், விபத்தில் இறந்த இளம்பெண் அறிவொளி நகா் பகுதியைச் சோ்ந்த நிா்மலாதேவி (22) என்பதும், இவா் கோவைபுதூா் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வந்ததும் தெரியவந்தது.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 1:02 AM

பொதுமக்கள் மறியல்:

விபத்து நிகழ்ந்த இந்தப் பகுதியில் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாகவும், இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் கூறி அறிவொளி நகா் பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோா் காலை 11 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையறிந்து அங்கு சென்ற போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, இந்தப் பகுதியில் சிக்னல் மற்றும் வேகத்தடை, பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

காலை 11 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டம் இரவு 7.45 மணி வரை நீடித்தது. முன்னதாக போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.