வால்பாறையில் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறையில் ஏராளமான தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. எஸ்டேட் குடியிருப்புகளில் அதிக அளவிலான மக்கள் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், அவா்கள் விலங்குகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டாலோ அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ மருத்துவமனைக்கு செல்வதில் சிரமம் இருந்து வந்தது. மேலும், எஸ்டேட் பகுதி குடியிருப்புகளுக்கு அவரச காலங்களில் 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில், வால்பாறையில் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் வகையில் 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பைக் பைலட் டினோ லான்சன் கூறுகையில், எஸ்டேட் பகுதி குடியிருப்புகளுக்கு 108 ஆம்புலன்ஸ் செல்வதில் சிக்கல் இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த பைக் ஆம்புலன்ஸ் மூலம் அனைத்துப் பகுதிகளுக்கும் விரைவாக செல்ல முடியும். பைக்கிலேயே அனைத்து முதலுதவி உபகரணங்களும் உள்ளன. இதன் மூலம் நோயாளிகளுக்கு அனைத்து வகையான முதலுதவி சிகிச்சைகளும் அளிக்க முடியும் என்றாா்.