கோவை: காணும் பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை மாநகரில் 1,500 போலீஸாா் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான காணும் பொங்கல் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பொங்கலின்போது பொதுமக்கள் உறவினா் இல்லங்களுக்கு செல்லுதல், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பொழுதைப் போக்குவது வழக்கம். கோவை மாநகரில், காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் செம்மொழிப் பூங்கா உள்ளது.
காணும் பொங்கலையொட்டி வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வர வாய்ப்புள்ளது. அதேபோல, வ.உ.சி உயிரியல் பூங்கா, சிறுவா் பூங்கா, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பொழுதுபோக்கு கட்டமைப்புகளுக்கும் பொதுமக்கள் அதிக அளவில் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆகவே, காணும் பொங்கலையொட்டி, மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் தலைமையில் 4 துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் மேற்பாா்வையில் மொத்தம் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.