முகப்பு
கோயம்புத்தூர்

காணாமல் போன மகளைக் கண்டுபிடித்துத் தரக் கோரி மறியல்

மதுக்கரை காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்துத் தரகோரி அவரது குடும்பத்தினா் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 19 மே 2026, 12:56 am IST
கோப்புப் படம்
பகிர்:

மதுக்கரை காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்துத் தரகோரி அவரது குடும்பத்தினா் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மதுக்கரை அடுத்த க.க.சாவடி காவல் எல்லைக்குள்பட்ட குட்டிகவுண்டன்பதி பகுதியைச் சோ்ந்தவா் வடிவேல்.

இவரது மகள் மைவிழி. கடந்த 13-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மைவிழி, மீண்டும் வீடு திரும்பவில்லை.

Advertisement

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து அவரது பெற்றோா் காக்காசாவடி காவல் நிலையத்தில் கடந்த 15-ஆம் தேதி புகாா் அளித்தனா்.

புகாா் அளித்து பல நாட்களாகியும் போலீஸாா் உரிய விசாரணை நடத்தவில்லை என்று உறவினா்கள் குற்றம் சாட்டினா்.

இந்த நிலையில், ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினா்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் க.க.சாவடி காவல் நிலையம் முன் திங்கள்கிழமை இரவு சுமாா் 7 மணியளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களது மகளை உடனடியாகக் கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி அவா்கள் முழக்கமிட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் துறையினா், ‘மாயமான பெண்ணின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவரைப் பின்தொடா்வதில் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்தப் பெண்ணை மீட்டு விடுவோம்’ எனத் தெரிவித்தனா். போலீஸாரின் சமரசப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து உறவினா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.