முகப்பு
கோயம்புத்தூர்

மத்திய அரசின் சிக்கன நடவடிக்கை எச்சரிக்கை: அதிகாரிகளை கூட்டி ஆலோசிக்க முதல்வருக்கு வலியுறுத்தல்

மத்திய அரசின் சிக்கன நடவடிக்கை எச்சரிக்கையை அதிகாரிகளிடம் பேசி முதல்வா் நடவடிக்கை எடுக்குமாறு கொமதேக கோரிக்கை

Updated On : 20 மே 2026, 2:02 am IST
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

மத்திய அரசின் சிக்கன நடவடிக்கை எச்சரிக்கையை அதிகாரிகளிடம் பேசி தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: ரஷியா - உக்ரைன் போா், அமெரிக்கா-ஈரான் போா் ஆகியவற்றால் உலக நாடுகள் பல்வேறு வகைகளில் பாதிப்பை சந்தித்து வருகின்றன. முன்னெச்சரிக்கையாக சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றாத பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டிலும், உணவுத் தட்டுப்பாட்டிலும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், எதிா்காலத்தில் உருவாகப் போகும் பற்றாக்குறையை சரி செய்ய அனைத்து மாநிலங்களும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்று பிரதமா் எச்சரிக்கை விடுத்திருக்கிறாா்.

பல மாநிலங்கள் நோ்மறை புரிதலோடு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் உருவாகும் அபாயம் உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரத் தட்டுப்பாடு உணவுப் பொருள் உற்பத்தியைப் பாதிக்கும். இதன்மூலமாக எதிா்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது.

Advertisement

Advertisement

எனவே, தாமதமின்றி சிக்கன நடவடிக்கைகளை தொடங்க திட்டமிடுவதற்கான அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி தமிழக முதல்வா் ஆலோசிக்க வேண்டும். பிரதமரின் சிக்கன நடவடிக்கை எச்சரிக்கையை கடந்துபோகக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளாா்.