பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இம்முடி கெட்டி முதலி ஆண்டு விழா
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் திருப்பணிச் செம்மல் இம்முடி கெட்டி முதலி ஆண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் திருப்பணிச் செம்மல் இம்முடி கெட்டி முதலி ஆண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு, திருவோண நட்சத்திரத்தில் சங்கமேஸ்வரருக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. மேலும், மழை வேண்டியும், விவசாயம், வியாபாரம் செழிக்கவும், மக்கள் நலம் பெறவும் 1,008 நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
முன்னதாக, திருமுறைக் கழகத்தின் பஜனைக் குழுத் தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் பஜனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழாவுக்கு அத்தாணி அதிமுக செயலர் ஏ.பி.ராஜா தலைமை வகித்தார். குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன், ஞானமணி குருக்கள், சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இம்முடி கெட்டி முதலி பல்லாண்டுகளுக்கு முன்னர் கொங்கு நாட்டை ஆண்ட குறுநில மன்னர். இவர், பல்வேறு கோவில்களைக் கட்டியதோடு, பாடல் பெற்ற தலங்களில் ஆலயங்களில் திருப்பணி செய்து புனரமைத்துள்ளார்.
பவானி வேதநாயகியம்மன் சன்னிதியில் உள்ள கெட்டி முதலி, சின்னம்மாள், ரங்கநாயகி, பூங்கோதை, அமைச்சர் நாராயணசாமி கவுண்டர், மன்னர் திருமலை நாயக்கர், காணியாச்சி, படையாச்சி ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கெட்டி முதலி பேரவை அமைப்பாளர் ஈஎம்எஸ்.சத்தியநாராயணன் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.