கமல்ஹாசனை தாக்கினால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
ஈரோடு மேற்கு மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கோபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு பேராபத்து ஏற்பட்டு வருகிறது. காவிரி பிரச்னையில் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு அமைக்கவில்லை. மத்திய அரசு அனுமதி கொடுக்காமலேயே, மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கிடைக்க தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். நீட் தேர்வில் மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தைக் கூட மத்திய அரசு பின்னுக்குத் தள்ளிவிட்டது. நீட்தேர்வில் தமிழக அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளர். இது வரவேற்கத்தக்கது.
அண்ணா பிறந்த நாளை திராவிட இயக்கங்களில் ம.தி.மு.க.தான் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு தஞ்சையில் பிறந்தநாள் மாநாடு நடைபெறுகிறது.
தமிழக மீனவர்களை பாதிக்கும் வகையில் இலங்கை அரசு கொண்டு வந்த சட்டத்தைக் கண்டித்து, மத்திய அரசு இது வரை குரல் கொடுக்கவில்லை என்றார்.
பேட்டியின்போது, கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பொருளாளர் அ.கணேசமூர்த்தி, ஈரோடு மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கந்தசாமி, கோபி ஒன்றியச் செயலாளர் குணசேகரன், நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதைத் தொடர்ந்து, ஈரோடு மாநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கடவுச்சீட்டு உள்பட பல வழிகளில் ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ஒரே நாடு, ஒரே வரி, ஒரே மதம், ஒரே கலாசாரம், இந்துத்துவ சக்திகளால் இயக்கப்படும் ஒரே அரசு என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு நகர்வது எதிர்கால இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும்.
நடிகர் கமல்ஹாசன் உள்பட யாருக்கும் கருத்துச்சொல்ல உரிமை உண்டு. கருத்துச் சொல்லும் கமல் மீது அமைச்சர்கள் வார்த்தைகளால் தாக்குவதும், எச்சரிக்கை விடுப்பதும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றார்.