குழுவாக இயங்கும் மனப்பான்மையை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கரூர் வைஸ்யா வங்கி நிர்வாக இயக்குநர் கே.வெங்கட்ரமணன் கூறினார்.
ஈரோடு அருகே பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற 29-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:
கடந்த 4 தலைமுறை காலகட்டத்தில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக முதலீடுகளுக்கு இந்தியா திறக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலைவாய்ப்பு நல்ல நிலையில் உள்ளது. உயர் கல்வி பெற விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு வங்கிகள் தாராளமாக கல்விக் கடனை வழங்கி வருகின்றன.
நேர்மை, நம்பிக்கை, உண்மைத் தன்மை, கடின உழைப்பு, முதியோர்களை மதிக்கும் குணம், இறைநம்பிக்கை ஆகிய குணநலன்கள் இருந்தால் சிறந்த மனிதனாக வாழலாம். கார்பரேட் கலாசாரம் வந்துவிட்டதால் தொழில், வேலை எதுவாக இருந்தாலும் குழுவாகத்தான் இயங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, குழுவாக இயங்கும் மனப்பான்மையை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, 1,815 மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.
விழாவில், கல்லூரித் தாளாளர் ஏ.வெங்கடாசலம், முதல்வர் எஸ்.குப்புசாமி, பாரம்பரிய அறங்காவலர்கள் தங்கவேலு கவுண்டர், ஏ.கே.இளங்கோ, பி.டி.தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.