ஈரோடு மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்கள் சாதியின் பெயரைக் கூறித் திட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சி, 4-ஆவது மண்டலத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருபவர் பாலு. இவரிடம், குடிநீர்க் குழாய் உடைப்பு தொடர்பாக காசிபாளையம் பகுதி அதிமுக செயலர் கோவிந்தராஜ் கூறியுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் பாலுவை ஜாதியின் பெயரைக் கூறித் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
மேலும், சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து துப்புரவுத் தொழிலாளர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். அதிமுக பிரமுகர் கோவிந்தராஜை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரியும், போலீஸாரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.