மொடக்குறிச்சி ஒன்றியம், முகாசி அனுமன்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் வேலை வழங்க மறுப்பதாகக் கூறி பணியாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மொடக்குறிச்சி ஒன்றியம், முகாசி அனுமன்பள்ளி ஊராட்சியில் 13 கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக இங்கு பணித்தள பொறுப்பாளராகப் பணியாற்றும் கீதா என்பவர் இப்பணியாளர்களில் குறிப்பிட்ட சில ஊர் பணியாளர்களுக்கு வாரத்தில் இருநாள் மட்டும் பணிக்கு அனுமதிப்பதாகவும், இதனால் மற்ற வேலைகளுக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும், தங்களை மற்ற ஊராட்சிகளில் இருப்பதைப்போல குழுவாகப் பிரித்து வாரம் ஒரு குழுவுக்கு வேலை வழங்க உத்தரவிடக் கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் அவர்களிடம் பேச்சு நடத்தினார். அதில், 3 அல்லது 4 கிராம மக்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு வாரமும் பணி வழங்க பணித்தள பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து பணியாளர்கள் கலைந்து சென்றனர்.