கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூர், பொலவபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பஞ்சு அரவை ஆலையில் திடீரென தீ விபத்து வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.
பொலவபாளையத்தில் அவிநாசியைச் சேர்ந்த அன்பரசு என்பவருக்குச் சொந்தமான தனியார் பஞ்சு அரவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பஞ்சு அரவை செய்து கொண்டிருக்கும்போது இயந்திரத்தின் அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இயந்திரத்துக்குச் சென்ற மின் இணைப்பை உடனடியாக பணியாளர்கள் துண்டித்து இயந்திரங்களை நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து, கோபி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், பஞ்சு பேல்களில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பஞ்சு, அரவை இயந்திரங்களும் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து நம்பியூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.