தாட்கோ கடன் பெற விரும்பும் ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்தி:
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் கீழ்கண்ட பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள 18 முதல் 65 வயது வரையுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானஉச்சவரம்பு ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம், துரித மின் இணைப்புத் திட்டம், தொழில்முனைவோர் திட்டம், பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டத்தில் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல், மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி, சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம், மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப் பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி-1 முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டய கணக்கர் செலவு கணக்கர் நிறுவனச் செயலர்களுக்கு நிதியுதவி, தையல் தொழில், கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதியுதவி உள்ளிட்டவற்றுக்கு தாட்கோ இணையதள முகவரி http://application.tahdco.com மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர் குறித்த முழு விவரங்களை புகைப்படம், இருப்பிடச் சான்றிதழ் எண், சாதி சான்றிதழ் எண் (எண், வழங்கப்பட்ட நாள், வழங்கியவர், வழங்கப்பட்ட அலுவலகம்), குடும்ப ஆண்டு வருமானச் சான்றிதழ் எண் (வழங்கப்பட்ட நாள், வழங்கப்படுவதற்கான காரணம்) நேர்காணல் நடத்தப்படும் தேதிக்கு ஒன்றரை ஆண்டுகள் முன்பு வரை வருமானச் சான்று பெற்றிருக்கலாம்.
பட்டா, சிட்டா (நிலம் வாங்குதல், நிலம் மேம்பாடு திட்டம்), குடும்ப அட்டை எண், ஆதார் எண், விண்ணப்பதாரரின் தொலைபேசி, செல்லிடப்பேசி எண், விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரி, திட்டங்களின் விவரங்கள் ஆகியவற்றை இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். தொலைபேசி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தவிர, திட்டங்களுக்கு ஏற்றாற்போல் தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கு அறிவிக்கப்பட்ட நாள்களில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மேலும், விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் மட்டும் பதிவு செய்யலாம்.
இதற்கான விண்ணப்பம் ஒன்றுக்கு பயனாளியிடமிருந்து ரூ. 20 வசூல் செய்யப்படும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் ஒப்புகை ரசீது விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.