மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட மினி லாரியை வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட மினி லாரியை வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
பவானி வட்டார, தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை அதிகாலை பவானி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிவேகமாகச் சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, ஆற்றிலிருந்து விற்பனைக்காக மணலைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில், ஒரிச்சேரியைச் சேர்ந்த சின்னசாமி என்பவருக்குச் சொந்தமான லாரி என்பதும், எலவமலை பகுதியில் பவானி ஆற்றிலிருந்து மணலை விற்பனைக்கு ஏற்றிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அபராதம் விதிக்க கோபி கோட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்தனர்.