மாணவர்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி உலகைப் படிக்கப் பழக வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியின் பவள விழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை தாளாளர் எஸ்.சிவானந்தன் தலைமையில் நடைபெற்ற சமுதாயச் சான்றோர்களைப் பாராட்டும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசியதாவது:
பள்ளியைத் தொடங்கி 75 ஆண்டுகள் கடந்து வந்த பாதையில் பல சான்றோர்கள் உறுதுணையாக இருந்துள்ளார்கள். அவர்களின் வாரிசுகளைப் பாராட்டுவது பெருமைக்குரியது.
இந்தியாவின் செயற்கைக்கோள்தான் உலகிலேயே முதன் முதலாக நிலவில் நீர் உள்ளதை கண்டுபிடித்தது. முதன் முதலாக நிலவில் கால் வைத்த அமெரிக்கா இந்த விஷயத்தில் 5 முறை தோல்வியே கண்டது. ரஷ்யா 9 முறை தோல்வியைக் கண்டது. ஆனால், நம் இந்தியா மட்டும்தான் முதல் முயற்சியிலேயே வெற்றியைக் கண்டது. இதுதான் அமெரிக்கா போன்ற நாடுகளை நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
மாணவர்கள், பாட புத்தகத்தைத் தாண்டி உலகைப் படிக்கப் பழக வேண்டும். ஆசிரியர்களை மதிக்க வேண்டும், தாய், தந்தை, தாய்நாடு, ஆளாக்கிய பள்ளி ஆகியவற்றுக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
இதில், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வி.சி.முருகேசன், தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவர் மணி, கவிஞர் தமிழன்பன், செங்குந்த மகாஜன சங்க மாநிலத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், முன்னாள் தலைவர் பென்னாடம் ஆ.ராஜவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.