பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி, பெத்தாம்பாளையம் பேரூராட்சிகளில் ரூ. 3 கோடி மதிப்பிலானத் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி, எல்லப்பாளையத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கவும், பெத்தாம்பாளையம் பேரூராட்சி, கோவில்பாளையம்புதூரில் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளையும் தொடக்கிவைத்தார்.
மேலும், பெத்தாம்பாளையத்தில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
பின்னர், அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகத்தை வழங்கினார்.
இதில், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.