உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, மாநில குடும்ப நல இயக்ககம் சார்பில், பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூன் 27 ஆம் தேதி முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, குடும்ப நலத் திட்டம் தொடர்பான விளக்கக் கண்காட்சி, குடும்ப நலம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டம் என ஒவ்வோர் நாளும், ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் "ஒரு குழந்தைக்கு ஒரு மரம்" என்ற கருத்தின் அடிப்படையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் எம்.ராஜேந்திரன், மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார்.
இதில், கல்லூரி துணை முதல்வர் மருத்துவர் ஏ.சந்திரபோஸ், துணைக் கண்காணிப்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், மருத்துவக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மருத்துவர் ஆர்.சண்முகசுந்தரம், மகளிர் மற்றும் மகக்பேறு துறைத் தலைவர் மருத்துவர் ஸ்ரீதேவி, பேராசிரியர்கள், பணியாளர்கள், செவிலியர், செவிலியர் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.